தமிழ்நாடு
திடீரென அதிகரிக்கும் கொரோனா: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கின்றாரா முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேலாக 1800க்கும் குறைவான கொரோனா பாதிப்புகளே இருந்த நிலையில் நேற்று திடீரென 1800க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்தது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்பட ஒரு சில மாநிலங்களிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து ஊரடங்கை நீடிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். நேற்று திடீரென கட்டுப்பாடுகளை வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் முக ஸ்டாலின், அதன்பின் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கொரோனா தொற்று அதிகரிக்கும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இன்று மாலை இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.