தமிழ்நாடு
மீண்டும் தமிழ்நாட்டில் 100-ஐ கடந்த கொரோனா வைரஸ் தொற்று!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இன்று புதியதாக 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 76 ஆக உள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 20 பேருக்கும், சென்னை மாலட்டத்தில் 16 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, கரூர், கிரிஷ்ணகிரி, நாகை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பரவல் உயர்ந்து வருகிறது. 500க்கும் கீழே பதிவாகி வந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 1,800-ஐத் தாண்டி பதிவானது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. குறிப்பாக, கேரளா மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.