தமிழ்நாடு
இனிமேல் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது.
அதன்படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்கள் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வி தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரிப்பு செய்தல் உள்பட பல பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் இதுவரை சுழற்சிமுறையில் வந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் பிறப்பித்துள்ள இந்த உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர்களை தினமும் பள்ளிக்கு வர உத்தரவிட்டதை அடுத்து பள்ளிகள் விரைவில் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கருதப்படுகிறது.