தமிழ்நாடு
நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்!
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இதுகுறித்து வேதனையுற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த மாணவர்களுக்கும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கும் நிதி உதவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரில் இயங்கிவரும் சாஃப்வேர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் இன்று காலை 10.50 மணி அளவில் பள்ளியில் உள்ள கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன் மற்றும் சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இசக்கி பிரகாஷ், சஞ்சய், ஷேக் அபுபெக்கர் மற்றும் அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்தை அறிந்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயம்பட்ட நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.