இந்தியா
கொரோனா தடுப்பூசியில் ஆர்வமின்மை: 24×7 தடுப்பூசி போட்டுக் கொள்ள புதிய திட்டம்!

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் நாட்டு மக்கள் தொடர்ந்து ஆர்வமின்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துச் செல்ல மத்திய அரசு, புதிய வித திட்டம் ஒன்றை அமல் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று தகவல் வந்துள்ளது. அப்படி விற்பனைக்கு வரும் தடுப்பூசியை எவ்வளவு ரூபாய்க்குள் விற்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு. இப்படியான சூழலில் தான், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விருப்பப்படும் மக்கள், தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு வழிகாட்டியுள்ளது. இதுவரை அரசு மருத்துவமனைகளைத் தவிர, நாட்டில் உள்ள 10,000 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள 1.15 கோடி முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போட இலக்கு வைத்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே பல முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக முறையான சோதனைகளை நிறைவு செய்யாத பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள சுகாதார ஊழியர்களே பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் வெறும் 11 சதவீதம் பேரே கோவாக்ஸின் மருந்துக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. மக்கள், தாங்கள் விருப்பப்படும் எந்நேரத்திலும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகள் தாங்கள் விரும்பும் எந்நேரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் மக்கள் அதிகமாகக் கூடுவது தவிர்க்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட் கிழமையன்று மட்டும், பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டனர்.



















