தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக உடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ்சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் முதல்வரின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து வந்த மிரட்டல் அழைப்பு புரளி என தெரியவந்தது. எனவே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் எனபது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.




















