இந்தியா
பெங்களுரு வட்ட இரயில் பாதை திட்டத்தில் 14 கி.மீ.துாரம் தமிழ்நாடு வழியாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும்.

பெங்களுரு வட்ட இரயில்பாதை 287 கி.மீ.துாரத்தில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக ரூ.23000 கோடி மதிப்பில் போடப்பட உள்ளது. இந்த பாதை நிதுவண்டா, வத்தரஹல்லி, தேவனஹல்லி, தொட்டபெல்லாபூர், மாலுார், ஹல்லலிகே, ஹஜ்ஜாலா மற்றும் சோலுார் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் போடப்பட உள்ளது. இதில் தேவனஹல்லி பிரதான பெரிய இரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. நில ஆர்ஜித நடவடிக்கைகளை மாநில அரசும் கட்டுமானங்களை ஒன்றிய அரசும் மேற்கொள்ள உள்ளன. விரிவான திட்ட அறிக்கை முடியும் தறுவாயில் உள்ளது. பெங்களுருவைச் சுற்றி உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அமைய உள்ள இது புறநகர் ரயில் சேவைக்கும் இணைப்பாக செயல்படும். ஏற்கனவே 7.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்கி விட்டன.
இந்த பாதையில் 14 கி.மீ.துாரம் தமிழ்நாடு வழியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், 1035 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளதால் அத்திட்டத்தை தமிழ்நாடு வழியாக செயல்படுத்துவதைக் கைவிட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஓசூரில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அந்த திட்டத்தை முடக்க கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிலைமை இப்படியிருக்க தமிழகத்திற்கு எந்த பலனும் இன்றி பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக நிலத்தை குறைந்த விலைக்கு கையகப்படுத்த தமிழ்நாட்டின் வழியாக 14 கிமீ் இத்திட்டத்தை செயல்படுத்த நினைப்பது எந்த விதத்தில் நியாயம் இதனை அனுமதிக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்து வருகின்றன.
இத்திட்டத்துக்காக தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியிலிருந்து பாகலுார் அருகே தேவீரப்பள்ளி வரை 14 கி.மீ. துாரத்துக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக தமிழக பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறுதிக்கட்ட அளவீட்டு பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையிலிருந்து 2 கி்மீ் துாரத்தில் உள்ள கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி மற்றும் சர்ஜாபுரம் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த அங்குள்ள நிலம் அளவீடு செய்யப்பட்டது. அங்கு நிலத்துக்கு இழப்பீடு தொகை அதிகம் கொடுக்க வேண்டும் என்பதால், தமிழக விளைநிலங்களைக் குறைந்த விலைக்கு எளிதாகக் கையகப்படுத்தலாம் என தமிழக எல்லைக்குள் இத்திட்டத்தை கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இத்திட்டத்துக்கு ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட கர்நாடக மாநில நிலத்தின் வழியாக திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தமிழகம் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.















