தமிழ்நாடு
பெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான்: குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பெண்கள் முன்பைப் போல இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும் பெண்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்தியாவில் பெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான் உள்ளனர் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
குருமூர்த்தியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் குருமூர்த்திக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தவாறு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ், பாஜகவில் இருப்பவர்கள் இதுபோன்று தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவிப்பது தமிழ்ச் சமூகத்திற்கே விரோதமானது.
சங்க காலத்திலிருந்தே ஆணும் பெண்ணும் சமம் என்று போற்றியது தமிழகம்தான். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்று வேதங்கள் சொன்னது. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தில் பெண்கள் படித்ததோடு மட்டுமல்லாமல் ஒளவையார் உள்பட 40 பெண் புலவர்களும் இருந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு கண்டனத்துக்குறியது. அவர் தனது கருத்தை பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.