தமிழ்நாடு
மீண்டும் நீட் விலக்கு மசோதா: சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட அனைத்து கட்சி முடிவு!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை இயற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்கள் கழித்து இந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா குறித்து அடுத்த கட்ட ஆலோசனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில் நீட் விலக்கு தொடர்பாக சட்ட மன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த அனைத்து கட்சி தலைவர்களும் சேர்ந்து முடிவு செய்து உள்ளனர். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடும் தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

















