வணிகம்
அமேசான், மைக்ரோசாப்ட்டை அடுத்து கூகுள்.. வேலையிழக்கும் 12 ஆயிரம் பேர்!
2023ஆம் ஆண்டு யாருக்கு நல்ல ஆண்டுகாக இருக்கிறதோ இல்லையோ, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு பிறந்த 20 நாட்கள் தான் ஆகியுள்ளன அதற்குள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து படிப்படியாக வேலை நீக்கம் செய்து வருகிறது. அமேசான் நிறுவனத்தில் வேலை இழந்த இந்தியர்கள் உள்பட பல நாட்டினர் தற்போது வேறு வேலையை தேடி வருகின்றனர்.
அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது. பொருளாதார தேக்க நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக சிக்கன நடவடிக்கைக்காக வேறு வழியில்லாமல் இந்த வேலை மிக்க நடவடிக்கை எடுப்பதாக மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ள ன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமேசான், மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களை அடுத்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய மெமோவில் வேலைநீக்க நடவடிக்கை குறித்து குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று வரை வேலையில் இருந்தவர்கள் இன்று திடீரென வேலையில்லை என்ற நிலை ஏற்பட்டால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆவது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவ்வப்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை சீரடைந்தால் மட்டுமே ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை உறுதி என்ற நம்பிக்கை ஏர்படும் என்றும் அதுவரை அவ்வப்போது வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வரும் என்றும் கூறப்படுகிறது. எனவே ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த நேரத்திலும் வேலையில் இருந்து நீக்கப்படுவோம் என்ற அச்சத்துடனே வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.