இந்தியா
இனி இரயில்வே பார்சலை வீட்டிலிருந்தே அனுப்பலாம்!!!

இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்துத் துறை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ROQIT என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தற்போது ரயில் மூலம் பார்சல்கள் அனுப்ப வேண்டுமானால் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று காகிதத்தில் எழுதிக் கொடுத்து அனுப்ப வேண்டும். அந்த பார்சல் எங்கிருக்கிறது என்ற டிராக்கிங் செய்ய முடியாது. எப்போது டெலிவரி என்பதையும் உறுதியாக கூற முடியாது. இந்த சிரமங்களால் பலரும் தங்களது சரக்குகளை தபால் அலுவலகம் மூலமும் கொரியர் மூலமும் லாரி மற்றம் தனியார் பேருந்துகள் மூலமும் அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் சேவை மூலம் சரக்குகளை அனுப்பும் முறையை 2026 முதல் இரயில்வே துறையினரால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நமது செல்போனில் ROQIT என்ற செயலியை திறந்து நமது முகவரி மற்றும் சரக்கு சென்று சேர வேண்டிய முகவரி சரக்கின் எடை மற்றும் விவரங்களை குறிப்பிட வேண்டும். பின்னர் சரக்கு சென்றடைய எத்தனை நாள் தேவை எனக் குறிப்பிட வேண்டும். பின்னர் அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கே வாகனம் வந்து உங்கள் சரக்கை எடுத்துச் சென்று முறைப்படி அனுப்பி வைக்கப்படும். உங்கள் போனில் உள்ள செயலி மூலமே உங்கள் சரக்கு எங்கே உள்ளது என்பதை டிராக்கிங் செய்து கொள்ளலாம்.
இந்த சேவை முதல் கட்டமாக வரும் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தெற்கு மத்திய ரயில்வேயில் ஐதராபாத் விஜயவாடா திருப்பதி பகுதிகளில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும். பின்னர் படிப்படியாக ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
இதுகுறித்து ROQIT நிறுவன சிஇஓ ”எங்களுக்கு வாகன துணை நிறுவனம் உள்ளது. இவற்றின் மின்சார வாகனங்கள் மூலம் வீடுவரை வந்து சரக்கு எடுக்கவும் வழங்கவும் பயன்படுத்துவோம். இதனால் முற்றிலும் மாசில்லாத சரக்கு போக்குவரத்து சேவையை வழங்க முடியும்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.














