இந்தியா
பெங்களூர் டேங்கர் மாஃபியாவுக்கு எதிராக களத்தில் தமிழர்.. ஐஏஎஸ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் ஆக்ஷன்

டெக் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி தண்ணீர் லாரி மாஃபியா மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொழுத்து கிடக்கிறது. இந்த நிலையில் தான், தமிழகத்தைச் சேர்ந்த, பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் (BWSSB) தலைவரான ராம்பிரசாத் மனோகர் IAS, டேங்கர் மாஃபியாவுக்கு கடிவாளம் போடும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தியாவின் ஐடி துறையின் மணிமகுடமாக பெங்களூர் உள்ளது. பெங்களூரில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு கோடைக் காலத்தின்போதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அந்த சமயங்களில் பொதுமக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வைப்பதில் தண்ணீர் லாரிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. கடந்த ஆண்டில் பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அப்போது, கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் ஏராளமான புகார்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது கோடைக் காலம் என்பதால் பொதுமக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்தவரான, கர்நாடக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் சஞ்சாரி காவேரி எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இத்திட்டத்தில், இந்திய அரசின் பிஐஎஸ் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் தண்ணீர் டேங்கர் லாரியில் பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மலிவு விலையிலும், சுகாதாரமான உயர்தர குடிநீரும் பொதுமக்களின் வீட்டு வாசலிலேயே நேரடியாக வழங்கப்படுகிறது. ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் ஓடிபி அடிப்படையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை துணை முதல்வர் டிகே சிவகுமார் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் நகரம் முழுவதும் 250 டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 55 காவிரி இணைப்பு மையங்களின் மூலமாக இந்த டேங்கர் லாரிகள் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில், முறையான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்து வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல், நகர்ப்புற ஏழை மக்கள் குழாய் நீர் இணைப்புகளுக்கான மொத்த தொகையை செலுத்த மிகவும் சிரமப்படுவதை உணர்ந்த ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், சரளா காவிரி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 600 சதுர அடி வரை உள்ள வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் காவேரி குடிநீர் இணைப்புத் திட்டத்தைப் பெறலாம். இதற்கு முதலில் 1,000 ரூபாய் மட்டும் முன்கூட்டியே செலுத்தினால் போதும். பின்னர், 12 இஎம்ஐ-களாக நிலுவைத் தொகையை செலுத்தலாம்.
600 சதுர அடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களுக்கு 20 முதல் 80 வரையிலான தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் காவேரி குடிநீர் குழாய் இணைப்புகளை எளிதாகப் பெற முடியும்.
இது தவிர, ராம்பிரசாத் மனோகர் தலைமையின் கீழ் “ஜனபர ஜலமண்டலி” எனும் திட்டத்தை தொடங்கியுள்ளார். இது ஒரு குடிநீர் வாரியம் போல செயல்பட்டு வருகிறது. இதில் மக்களே முக்கியத்துவம் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலமாக மழைநீர் சேகரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மறுபயன்பாடு செய்வது, ஏரிகளைப் புணரமைத்தல், அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் தலைவராக ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்ற பின்னர் பொதுமக்களுக்கான சேவைகளில் ஏற்படும் குறைகளைத் தீர்க்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தண்ணீர் கட்டணம் செலுத்துவது, அதனை எளிமைப்படுத்துவது போன்ற பணிகளை இந்தியாவிலேயே பெங்களூரில் தான் உருவாக்கியிருக்கிறார்.
ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் கர்நாடகாவில் மாவட்ட கலெக்டர் உட்பட பல்வேறு பணிகளை செய்தார். அப்போது, காகிதமில்லா நிர்வாகம், வசதி குறைந்த நகரங்களில் ரத்த வங்கிகளைத் தொடங்குவது என பல்வேறு முக்கிய சேவைகளை ஆற்றியுள்ளார். தற்போது பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் தலைவராக பணியாற்றி வருகிறார்..















