இந்தியா
பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!

2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு, தற்போது டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனையை நடத்தி வருகின்றன.

#image_title
குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்கு பின் வெடித்த மதக்கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அங்கு முதல்வராக மோடி இருந்தார். இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் போன்றவை விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.
இந்த ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்களில் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.




















