தமிழ்நாடு
இனி ஒன்றிய அரசு என தான் அழைப்போம்: சட்டப்பேரவையில் முதல்வர் திட்டவட்டம்!

இனிமேல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என்று சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். திமுகவுக்கு ஆதரவான ஊடகங்களும் ஒன்றிய அரசு என்ற செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
ஒன்றியம் என்பது தவறானது அல்ல என்றும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசை ஒன்றியம் என்று சொல்லித்தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே பயன்படுத்துவதாக அவர் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசின் செய்திக்குறிப்பு, அறிக்கை ஆகியவற்றில் மத்திய அரசு என்று தான் குறிப்பிட்டு வெளியிடப்படுகிறது என்றும், அரசுமுறையாக மத்திய அரசு என்று தான் அழைக்கப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் முதல்வரின் இந்த கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர். முதல்வர் இனி தமிழக அரசின் செய்திக்குறிப்புகளில் ஒன்றிய அரசு என குறிப்பிடுவாரா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


















