இந்தியா
கேரளாவில் மீண்டும் முழுஊரடங்கு: அரசு அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் சில மாநிலங்களில் உயர்ந்து வருவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனை அடுத்து கேரள அரசு அதிரடி நடவடிக்கையாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது
கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு என கேரள அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாகவும் இதனை அடுத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் மது கடைகள், வணிக வளாகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவம், சுகாதாரம், பத்திரிகைகள் வழக்கம்போல் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால் மீண்டும் வாரயிறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.





















