இந்தியா
தமிழகம் எத்தியோப்பியா ஆகிவிடும்: மாநிலங்களவையில் அனல் பறந்த வைகோவின் பேச்சு!

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார்.
பொதுவாக பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்களுக்கு பேச குறைவான நேரம் தான் வழங்கப்படும். இதனால் வைகோ தான் பேச இருந்த கருத்து மிக நீளம் என்பதால் அதனை மின்னல் வேகத்தில் படித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசினார்.
தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக் கூடிய மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த முயல்கிறது. மோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும் என்றார்.
மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முறை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் எதிர்ப்புகள் குறித்தும் மேற்கொண்டு மத்திய அரசு வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனுமதிகளையும் சுட்டிக்காடி பேசினார் வைகோ.
















