வணிகம்
2023ல் மட்டும் 30 லட்சம், மொத்தம் 20 கோடி.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்!
2023ஆம் ஆண்டு மட்டும் 30 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சேர்த்தால் மொத்தம் 20 கோடிக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆய்வு கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்பட மிகப்பெரிய நிறுவனங்களே தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களையும், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்களையும், கூகுளின் தாய்நிறுவன் நிறுவனமான ஆல்பபெட்டா 12000 ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலையை விட்டு நீக்கி உள்ளதால் வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக இருக்கும் என்றும் ஏற்கனவே வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் அது 20.8 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது என்றும் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் வேலையில்லா திண்டாட்டம் 5.8% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே ஏற்கனவே வேலைகள் இருக்கும் நபர்கள் தங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ள தங்களுடைய முழுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் வேலைவாய்ப்பு நிலை என்பது 2025க்கு முன்னரே மீட்கப்படும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்கு பிறகு வேலைக்கு ஆள் எடுக்கும் பணி அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவிலான பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல், உக்ரைன் நாட்டின் மீது நடந்த போர், பணவீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்களே வருமானம் இன்றி திண்டாடி வருவதாகவும் அதனால் சிக்கன நடவடிக்கை எடுப்பதற்காக முதல் கட்டமாக வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய வேலை வாய்ப்பு கடந்த ஆண்டு 2.3% அதிகரித்தாலும் இந்த ஆண்டு ஒரு சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்றும் அதனால் அதனால் சுமார் 20 கோடி பேர் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக சிக்கலில் இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதாரம் நிலை காரணமாக இன்னும் பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எனவே கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொண்டு அந்த வேலையில் முன்னேற இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பாக சொந்த தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.