இந்தியா
CUET தேர்வை ஏற்க மறுக்கும் மத்திய பல்கலைக்கழகங்கள்: அதிருப்தியில் யுஜிசி
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பதற்கு CUET நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது.
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பிரிவிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் CUET நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் வெளியான அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான மாநில முதல்வர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒருசில தனியார் பல்கலைக்கழகங்கள் CUET நுழைவுத்தேர்வை ஏற்க மாட்டோம் என அறிவித்ததை அடுத்து யுஜிசி சமீபத்தில் CUET தேர்வை ஏற்க விரும்பாத பல்கலைக்கழகங்கள் தாங்களாகவே தனியாக நுழைவுத் தேர்வை வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 54 பல்கலைக்கழகங்களில் 32 பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET நுழைவுத்தெர்வு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் 22 பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்ததாகவும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
CUET நுழைவுத்தேர்வை பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்ததற்கு அவர் தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.