சினிமா செய்திகள்
திரையரங்குகளில் இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி- தமிழக அரசின் ‘குட் நியூஸ்’!

தமிழகத்தில் இயங்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படமும், சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பின்னர் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், பெரிய ஹீரோ படங்கள் வெளியாவதால், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறித்தி வந்தார்கள். கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ள மட்டுமே அனுமதி அளித்திருந்தது தமிழக அரசு. தற்போது அந்த கட்டுப்பாடில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, திரையரங்குகள் முழு வீச்சில் செயல்பட அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். சிம்புவம் இன்று காலை அறிக்கை வெளியிட்டு, இதே கோரிக்கையை வலியுறுத்தினார். இப்படியான சூழலில் இந்த உத்தரவு வந்துள்ளது. இதனால் விஜய், சிம்பு ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமா துறையினரும் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளார்கள். இனி வரும் வாரங்களில் புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















