தமிழ்நாடு
விவசாய கடனை அடுத்து மகளிர் சுயஉதவி குழு கடனும் தள்ளுபடியா?

விவசாய கடனை அடுத்து மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பல சலுகை அறிவிப்புகள் தமிழக அரசிடமிருந்து அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் அவற்றின் மதிப்பு 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பயிர்க் கடனை அடுத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அந்தக் கடனையும் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் குழுக்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் ஒரு சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அல்லது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதில் இது குறித்து அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



















