தமிழ்நாடு
ஓட்டுரிமைக்கு 18 வயது, திருமணத்திற்கு 21 வயதா? விஜயகாந்த் அறிக்கை!

ஒரு பெண்ணுக்கு ஓட்டுப்போடும் வயது 18 என்று இருக்கும்போது, திருமணத்திற்கு மட்டும் 21 வயதா? என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன் உடல் ரீதியாகவும், மன ரீதியாக அவர்கள் பக்குவம் அடைவார்கள்.
சுயமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சுமூகமாக வழிநடத்த முடியும். அதேசமயம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை கொடுமை, விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர்களை பாதுகாத்திடும் பொருட்டு கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர். இளம் பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு காலம் தாழ்த்த கிராமப்புற மக்கள் விரும்புவதில்லை.
எனவே பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கியுள்ளதால் மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
ஓட்டுரிமைக்கு 18 வயது, திருமணத்திற்கு 21 வயதா? என என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் ஆண்களுக்கான திருமண வயது 21 தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா? என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



















