தமிழ்நாடு
திமுககாரனாக பாருங்கள்; எனது மகனாக பார்க்காதீர்கள்: அன்பகத்தில் உருக்கம்!
நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை வெற்றிபெற வைக்க திமுக முழு மூச்சாக களத்தில் இறங்கியுள்ளது.
இதனையடுத்து வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் பற்றிய ஆலோசனைக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்றது. வழக்கமாக அறிவாலயத்தில் நடைபெறும் இதுமாதிரியான ஆலோசனை கூட்டம் இந்தமுறை அன்பகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகனின் பேச்சில் வழக்கமான கேலியும், கிண்டலும் இருக்கவில்லை. மாறாக துரைமுருகன் உருக்கமாக பேசினார். காரணம் வேட்பாளராக நிற்பது அவரது மகன் கதிர் ஆனந்த்.
வேலூர் தேர்தல் என்பது துரோகத்தால் நிறுத்தப்பட்ட தேர்தல். தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நிறுத்தப்பட்ட அறிவிப்பு வந்தபோது நான் துடித்துவிட்டேன். அப்போது தளபதிதான் எனக்கு ஆறுதல் சொன்னார். நம்பிக்கை கொடுத்தார். வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் நிற்கிறான் என்று பார்க்காதீர்கள். ஒரு திமுககாரன் நிற்கிறான், கட்சியின் ஊழியன் நிற்கிறான் என்று பாருங்கள். அப்படிப் பார்த்து வேலை செய்து வெற்றிபெற வையுங்கள் என்று பேசினார் துரைமுருகன்.