தமிழ்நாடு
மாநிலங்களவையில் தமிழில் பதவியேற்று தடைகளை வீழ்த்தினார் வைகோ!
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து அவர்களுக்கு பதிலாக இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உள்ளிட்ட 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னதாக வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க கூடாது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியும் மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்நிலையில் இந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று மாநிலங்களவையில் தமிழ் மொழியில் பதவியேற்று அசத்தியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வைகோ என்னும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் தற்போது ஏற்க இருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்று விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன் என்று கூறி பதவியேற்றார்.
அதுபோலவே திமுக எம்பிக்கள் சண்முகம், வில்சன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் அதிமுக உறுப்பினர் சந்திரசேகரன், முகமது ஜான் கடவுளின் பெயரால் உறுமொழி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டானர். 5 பேரும் தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் இன்று பதவி ஏற்றுக்கொள்ளவில்லை.