தமிழ்நாடு
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை: நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர்!
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்த எஸ்.,வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சந்திரமணி விசாரித்து வந்த நிலையில் இன்று எஸ்.வி.சேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே மன்னிப்பு கோரியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் ஒருவர் கருத்தை படித்து பார்க்காமல் பகிர்ந்தது தனது தவறுதான் என்றும், அந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கம் இல்லை எனவும் கூறி மன்னிப்பு கேட்பதாகவும், அரசு தரப்பில் விசாரணைக்கு தேவைப்படும் போதெல்லாம் ஆஜராக தயாராக இருப்பதாகவும் எஸ்.வி.,சேகர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நான்கு வழக்கிலும் தனித்தனியாக மன்னிப்பு கடிதத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.