தமிழ்நாடு
பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட பெண்ணை தீவிரவாதியாக சித்தரிக்கும் தமிழிசை!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்த விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என ஒரு பெண் கூச்சலிட்டதால் அவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியுள்ளது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தமிழிசை. அவர் பயணம் செய்த விமானத்தில் சோஃபியா என்ற பெண்ணும் பயணித்துள்ளார். வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பை முடித்து நாடு திரும்பும் சோஃபியா தமிழிசையை பார்த்ததும் பாசிச பாஜக ஒழிக, ஒழிக என கோஷமிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை விமானம் தரையிறங்கியதும் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு அந்த பெண்ணும் கோஷமிட எனக்கு உரிமை உள்ளது என வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து விமான நிறுவனத்திடமும், விமானநிலைய காவல்நிலையத்திலும் புகார் அளித்தார் தமிழிசை.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கூச்சலிட்ட பெண் எதாவது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது எனது சந்தேகம். அவர் சாமானிய பயணியைப் போல் நடந்துகொள்ளவில்லை. வெளியே வந்து என்ன வேண்டுமானாலும் கூச்சலிடலாம் என்றார்.
பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட பெண்ணை தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தமிழிசை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூச்சலிட்டால் அவர் தீவிரவாதியா? பொதுவாக பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசினால் அவர்கள் தேச விரோதிகள், தீவிரவாதிகள் என பாஜக முத்திரை குத்துவது வழக்கமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சி தான் தமிழிசை இப்படி கூச்சலிட்ட பெண் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறியுள்ளது. இவர்களது இந்த கருத்து ஜனநாயகத்துக்கு எதிரானது. அனைத்து கட்சியினரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.