தமிழ்நாடு
புதையலுக்கு ஆசைப்பட்டு குழிதோண்டிய விவகாரம்: இருவர் தப்பியோட்டம்

தூத்துக்குடியில் புதையலுக்கு ஆசைப்பட்டு குழிதோண்டியதில் விஷவாயு காரணமாக இருவர் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சற்றுமுன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்ற பகுதியில் முத்தையா என்பவர் வீட்டில் புதையல் இருப்பதாக கேரள மாந்திரீக ஒருவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த குடும்பத்தினர் வீட்டில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென விஷவாயு பரவியதால் குழி தோண்டும் பணியில் இருந்த நால்வர் மயக்கமுற்றனர். அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்களில் இருவர் பரிதாபமாக மரணமடைந்து விட்டனர்.
மேலும் இருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இருவரும் இன்று காலை திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்பி ஓடியவர்களின் பெயர் சிவமாலை மற்றும் சிவபாலன் என்றும் அவர்கள் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


















