இந்தியா
நான் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுகிறேன்: பிரியங்காவின் பரபரப்பு பேட்டி!

திரையுலகில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களின் திரை பிரபலத்தை பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுவது வழக்கமாக மாறிவிட்டது. திரையில் கோலோச்சிய பலரும் அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள். இதற்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு. இந்நிலையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜோடியாக நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோன்ஸ் ஜோடி உள்ளது. காதலர்களாக சுற்றிவந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தது.
இந்நிலையில் இதனை பொய்யாக்கும் விதத்தில் அமைந்துள்ளது பிரியங்கா சோப்ரா சமீபத்தில் சண்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி. அதில் பிரியங்கா சோப்ரா, நான் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுகிறேன். என் கணவர் அமெரிக்காவின் அதிபராக வேண்டும். நாங்கள் இருவரும் மாற்றத்தை விரும்புபவர்கள். நிக் ஜோன்ஸ் நல்ல தலைவராக இருப்பார் என்றார்.
மேலும் தனது கணவர் குறித்து கூறிய பிரியங்கா, பெண்ணியவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்த அவர் தயங்காதவர். அதனாலே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மிகவும் புத்திசாலியான நபர். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொள்ளக் கூடியவர். பிடித்ததைப் பிடித்த நேரத்தில் செய்யக்கூடியவள் நான். எனக்கு முழு உறுதுணையாக இருக்கக் கூடியவர் நிக் ஜோன்ஸ் என்றார்.



















