தமிழ்நாடு
விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்த பிரேமலதா!
நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த உடன் அவர் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் கடந்த 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் என்பவர் தான் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் தற்போது பிரேமலதா போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் டெபாசிட்டை இழந்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவினர் அனைவரும் தோல்வியடைந்தனர் என்பதும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் கஷ்டப்பட்டு காப்பாற்றிய தேமுதிகவை சின்னாபின்னமாக்கி விட்டார் பிரேமலதா விஜயகாந்த் என்று அவரது கட்சியினரே தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். அளவுக்கு அதிகமான ஆசை, அதிக பணம், அதிக தொகுதிகள் கேட்டு தொல்லை தருதல், கட்சி கட்டமைப்பை கவனிக்காமல் விட்டது, அகம்பாவமான பேச்சு ஆகியவை தான் பிரேமலதாவின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இனிமேல் தேமுதிக எழுச்சி பெற வாய்ப்பே இல்லை என்றும் பேசாமல் கட்சியை கலைத்து விடலாம் என்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.