தமிழ்நாடு
வங்கக்கடலில் பபுக் புயல்: கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென் சீனக்கடலில் உருவான பபுக் புயலானது தற்போது வங்கக்கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியிலும் வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் சீனக்கடலில் இருந்து வங்கக்கடலில் நுழைந்துள்ள இந்த பபுக் புயல் குறித்து நேற்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி, தென் சீனக் கடலில் உருவான பபுக் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது இன்று முற்பகலில் அந்தமான் கடல்பகுதியில் நிலைகொள்ளும். இதைத் தொடர்ந்து இது வலுவிழந்து மியான்மர் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பபுக் புயல் காரணமாக அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில் பலத்தக் காற்று வீசும். கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.