இந்தியா
பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
வரும் 20-ஆம் தேதி சதீஸ்கரில் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினர் அல்லாத சில நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு நியமிப்பார்களா? அப்படி நியமித்தால், உண்மையில் நேரு ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்கினார் என்று நான் ஒப்புக்கொள்வேன் என சவால் விடுத்தார்.
இதற்கு தனது டுவிட்டரில் இன்று பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். 1947-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆச்சாரியா கிரிபாலானி, பட்டாபி சீதாராமையா, புருஷோத்தம தாஸ் டண்டான், யூ.என். தாபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவியா, காமராஜர், நிஜலிங்கப்பா, சி. சுப்பிரமணியன், ஜக்ஜீவன் ராம், ஷங்கர் தயால் சர்மா, தேவ காந்த பருவா, பிரம்மானந்த ரெட்டி, பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸின் தலைவர்களாக இருந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் யார் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டு பிரதமர் நீண்ட நேரம் பேசுகிறார். அந்த நேரத்தில் ஒரு பாதியை ஒதுக்கி பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, ரஃபேல், சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றைப் பற்றி பிரதமர் பேசுவாரா? விவசாயிகள் தற்கொலை, வேலையில்லாமை, கும்பல் வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, காதலருக்கு எதிரான வன்முறை, பசு பாதுகாப்பு கும்பல்களின் வன்முறை, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றியும் பிரதமர் பேசுவாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


















