தமிழ்நாடு
ராஜ கண்ணப்பன் ஆதரவால் ப.சிதம்பரம் மகிழ்ச்சி: ஒரே கல்லில் இரண்டு மாங்கா!

அதிமுகவில் அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவளித்திருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வருகையால் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மகிழ்ச்சியில் உள்ளாராம். ராஜ கண்ணப்பன் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் என மூன்று முக்கிய துறைகளை கவனித்தவர்.
இவர் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தென்மாவட்டங்களில் பரவலாக உள்ள இவரது சமூகத்து வாக்குகள் தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல உள்ளது. இவரது ஆதரவாளர்கள் பலரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதனால் சிவகங்கை தொகுதியில் போட்டியிட உள்ள ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இவரது திமுக ஆதரவால் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
இது ஒருபக்க என்றால் ப.சிதம்பரத்துக்கு தனிப்பட்ட ரீதியில் ராஜ கண்ணப்பனின் திமுக ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கையில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டார் ராஜ கண்ணப்பன். ஆனால் அந்த தேர்தல் முடிவு சர்ச்சைக்குரியதாக மாறியது. ப.சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ராஜ கண்ணப்பன் வழக்கு தொடுத்தார். இது தற்போதுவரை நிலுவையில் உள்ளது. இப்போது கண்ணப்பன் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்த வழக்கும் ஒரு சமரச முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. ராஜ கண்ணப்பன் வருகையால் சிதம்பரம் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
















