தமிழ்நாடு
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை: திடீரென பல்டி அடிக்கும் ஓபிஎஸ்!

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்றும், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒரு சிலர் கூறி வரும்போது நிலையில், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஓபிஎஸ் அவர்கள் இன்று பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அண்ணா நகரில் இன்று பேட்டியளித்த ஓபிஎஸ் அவர்கள், ‘இரட்டை தலைமையின் கீழ் தற்போது அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் அதனை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கூறிவந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது திடீரென பல்டி அடித்து சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறியுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் அவர்கள் தனியாக செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து அவர் செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த பேட்டி அதனை உறுதி செய்வது போல் தெரிவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

















