தமிழ்நாடு
1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை: தேர்வு உண்டா?
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் அதுவரை பள்ளிகள் செயல்படும் என்றும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறையின் உத்தரவின்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை வகுப்புகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் ஒன்று மூதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாவதனால் மாணவர்களின் நலன்
கருதியும் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கும் ஏதுவாக இனிவரும் நாட்களில் நடக்க இருக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் அன்று தேர்வு எழுதும் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வருவர்.
ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில் 1 முதல் 9 வகுப்புகள் வரை இறுதித் தேர்வுகளுக்கு மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டும் தேர்வுகள் நடைபெறும். பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.