தமிழ்நாடு
வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் சோகம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த திருமகனின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் மொத்தம் 16 சுற்றுகளாக 15 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 5 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தற்போது 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,116 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 29,338 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறும் சூழல் உள்ளதால் இந்த வெற்றியை திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு செல்வேன். தேர்தலில் நாங்கள் பெரிய வெற்றியை பெற்றாலும் அதனை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. மகன் விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும். மக்களுக்காக அவன் செய்ய நினைத்த திட்டங்களை செயல்படுத்துவேன் என்றார்.