தமிழ்நாடு
காதல் திருமணம் செய்த தங்கையை வீட்டுக்கு அழைத்து கொலை செய்த அண்ணன்: கும்பகோணத்தில் பரபரப்பு
காதல் திருமணம் செய்த தங்கையை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து கும்பகோணம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே சரண்யா என்பவருக்கு அவரது அண்ணன் சக்திவேல் என்பவர் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் சரண்யா சென்னையில் உள்ள மோகன் என்பவரை காதலித்து நிலையில் திடீரென வீட்டில் இருந்து வெளியேறி மோகனை திருமணம் செய்துகொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன் சக்திவேல் உனது நகைகள் வங்கியில் அடமானம் இருக்கிறது என்றும் நீ வந்தால் தான் அதை மீட்க முடியும் என்றும் அதனால் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்ணனை நம்பி கணவருடன் வீட்டுக்கு வந்த சரண்யாவை வங்கிக்கு அழைத்துச் சென்று நகைகளை மீட்ட பின் அவரையும் அவரது கணவர் கணவர் மோகனையும் வெட்டி கொலை செய்தார். இதற்கு சரண்யாவை திருமணம் செய்ய இருந்த ரஞ்சித் என்பவரும் உடந்தை என தெரிகிறது.
இந்த நிலையில் சரண்யா மற்றும் அவரது கணவரை கொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளதாகவும் இருவரையும் போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் ஆன ஒரே வாரத்தில் புதுமணத்தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.