தமிழ்நாடு
கஜா புயலை விட கொடூரமானது திருவாரூர் தேர்தலை ரத்து செய்தது: மீண்டும் நாஞ்சில் சம்பத்!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயத்தமானது. இந்நிலையில் அந்த தேர்தலை கஜா புயல் நிவாரண பணி காரணமாக தற்போது ரத்து செய்வதாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்த தேர்தல் ரத்து செய்தி தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த தேர்தல் ரத்து ஆனதன் பின்னணியில் அரசியல் கட்சி ஒன்றின் நேரடி தலையீடு இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் தேர்தல் ரத்து குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் இணந்தார். அதிமுகவில் துணை கொள்கைபரப்பு செயலாளராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் வலம் வந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா, தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேசி வந்தார்.
பின்னர் தினகரன் அரசியல் கட்சி ஆரம்பித்ததும் அதில் திராவிடம் இல்லை என கூறி அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று நாஞ்சில் சம்பத்திடம் சினிமா குறித்து பேட்டி எடுத்தது. அப்போது அரசியல் கேள்வியாக திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டதை எப்படி நினைக்கிறீர்கள்? என கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத் தனது பழைய அரசியல் பேட்டிகளை போன்று அதிரடியாக பேசினார். கஜா புயலை விட கொடூரமானது இந்த முடிவு. ஜனநாயக தேவதை ரத்தக்கொதிப்பில் இருக்கிறாள். பெரும்பாண்மை இல்லாத ஒரு அரசு ஆடுகிற தப்பாட்டத்தை யாருடைய ஆசியோடோ நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றார் நாஞ்சில் சம்பத்.












