தமிழ்நாடு
கொரோனா தொற்று ஏற்பட்ட அமைச்சர் காமராஜுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை: மருத்துவமனை விரைந்த முதல்வர்!

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அமைச்சர் காமராஜுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அமைந்தக்கரையில் இருக்கும் எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் காமராஜ், அமைந்தக்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனை விரைந்தனர்.
அங்கு சென்றிருந்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து விளக்கம் கொடுத்தார்.









