தமிழ்நாடு
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்: தினகரனை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் சட்டப்பூர்வமாக மீட்டெடுப்போம் என்று அறிக்கை வெளியிட்டார். இதற்கு அதிமுகவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் முடிந்து 47-வது ஆண்டு தொடக்கம் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் தினகரன் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் சட்டப்பூர்வமாக மீட்போம் என கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், டோக்கன் கொடுத்து ஜெயித்த தினகரன் ஆர்கே நகரை திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவர் ஆர்கேநகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு எம்எல்ஏ பதவியை மீட்டெடுக்கட்டும். அது நிச்சயமாக அவரால் முடியாது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம் என்ற கதைதான் அவருடைய கதை. சுற்றியுள்ள 5 சதவிகிதத்தினரை வைத்து அரசியல் செய்கிறார் தினகரன் என்று விளாசினார்.




















