தமிழ்நாடு
அமமுகவை வழிநடத்த தினகரன் தயாராக இல்லை: அமைச்சர் பரபரப்பு பேட்டி!
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சி அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. காரணம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக அமமுக விளங்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்திக்க நிலைமை தலைகீழானது.
அமமுக அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்திக்க தற்போது அமமுகவில் இருந்து பலரும் பிரிந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலரோ ஒரு குழுவோ பிரிந்து செல்வதால் அமமுகவுக்கு பாதிப்பில்லை என்று தினகரன் கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அமமுக கட்சி அல்ல, அது ஒரு குழு என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். லெட்டர் பேட் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அந்த கட்டெறும்பு சிற்றெறும்பாகி அது தற்போது காணாமல் போய்விட்ட கதையாகத்தான் உள்ளது. கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது. எனவேதான் அமமுகவில் இருந்தவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி வந்துள்ளனர் . இன்னும் நிறைய பேர் வரவுள்ளனர்.
அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக தினகரன் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அமமுகவில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர் என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டிய கூட்டத்தில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுகவுக்கு போக வேண்டியவர்கள் போகலாம் என்று கூறுவதன் மூலம் அமமுகவை வழிநடத்த தினகரன் தயாராக இல்லை என்று தெரிகிறது. எனவே அமமுகவில் உள்ள சகோதரர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் என்றார்.