கிரிக்கெட்
சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசு தீர்மானித்தது.
லக்னோ திணறல்
கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில், லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 14 ரன்கள், மனன் வோரா 10 ரன்கள், அடுத்து களம் இறங்கிய கரன் சர்மா 9 ரன்கள், கேப்டன் குருணால் பாண்ட்யா 0 ரன், அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
லக்னோ அணி 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து அதிரடி வீரர் நிகோலஸ் பூரனும், இளம் வீரர் ஆயுஷ் பதோனியும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த இணை 59 ரன்கள் சேர்த்த நிலையில் பூரன் 20 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து கிருஷ்ணப்பா கவுதம் களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய பதோனி 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
மழையால் ஆட்டம் ரத்து
லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.