கிரிக்கெட்
அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாபை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று இரவு மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அதிரடி ஆட்டம்
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரான் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் பிரபசிம்ரான் 9 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவான் 30 ரன்கள் மற்றும் மேத்யூ ஷார்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்க விட்டு அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. லிவிங்ஸ்டன் 82 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். தொடர்ந்து 215 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் மும்பை அணி விளையாடியது.
மும்பை அபார வெற்றி
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா ரன் எடுக்காமலும், அடுத்து வந்த கேமரூன் கிரீன் 23 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்து, நிலைத்து நின்று ஆடி ரன் வேகத்தை வேகமாக உயர்த்தியது.
சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், இஷான் கிஷன் 71 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இறுதி ஓவர்களில் விளையாடிய திலக் வர்மா 3 சிக்ஸர்கள், மற்றும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டு அசத்தினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.