வணிகம்
பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் சுந்தர் பிச்சையும் சத்ய நாதெள்ளாவும் தான்… ஆவேச கருத்துக்கள்!
கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் ஒரு நிறுவனத்தின் வருவாய் குறைந்தால் அதற்கு ஊழியர்கள் பொறுப்பல்ல என்றும் சி.இ.ஓக்கள் தான் பொறுப்பு என்றும் அதனால் சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாதெள்ளா ஆகியோர்கள் தான் பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் ஆவேசமான கருத்துக்கள் இணையதளங்களில் பதிவாகி வருகிறது.
வளர்ந்து வரும் பொருளாதாரம் மந்த நிலை பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அமேசான். கூகுள். மைக்ரோசாப்ட். ஃபேஸ்புக், டுவிட்டர், விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் வயிற்றில் அடித்து வருகின்றன.
ஒரு நிறுவனத்திற்கு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என முடிவு செய்வது அந்த நிறுவனத்தின் சி.இ.ஓக்கள் தான் என்றும், வேலைக்கு எடுத்துவிட்டு அந்த ஊழியர்களை சரியாக பயன்படுத்தாமல் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாமல் இருந்தது சி.இ.ஓக்களின் தவறு என்றும், எனவே வேலையை விட்டு நீக்கப்பட வேண்டியது சி.இ.ஓக்கள் தான் என்றும் ஆவேசமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் சுந்தர் பிச்சை மட்டும் சத்ய நாதெள்ளா ஆகியோர்கள் தான் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து விட்டால் மட்டும் உடனடியாக அந்நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு சென்று விடாது என்றும் ஊழியர்கள் எவ்வளவு குறைகிறார்களோ அந்த அளவுக்கு பணிகளும் குறையும் என்றும் மீதமுள்ள ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும் என்றும் அதனால் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்றும் பொருளாதார ஆலோசர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே வேலைநீக்க நடவடிக்கையை உடனடியாக நிறுத்திவிட்டு நிறுவனத்தை வளச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு வேறு என்ன வழி என்ன ஆராய வேண்டுமே தவிர வேலை நீக்க நடவடிக்கை எடுத்து ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்திற்கும் உலை வைக்க கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.