சினிமா செய்திகள்
இந்திப் படத்தில் ஜோதிகா: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டிற்கு திரும்புகிறார்!

தமிழ்த் திரை உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் ஜோதிகா. இவர் தனது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்திப் படத்தில் ஜோதிகா
கடந்த சில ஆண்டுகளாக ஜோதிகாவின் நடிப்பில் 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், ராட்சசி மற்றும் உடன்பிறப்பே போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்நிலையில் ஜோதிகா தற்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அஜய்தேவ்கான் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடைசியாக ஜோதிகா 1998 ஆம் ஆண்டு வெளியான “டோலி சாஜா கே ரக்னா” எனும் இந்திப் படத்தில் அக்ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அஜய்தேவ்கான் மற்றும் மாதவன் நடிக்கும் திரைப்படத்தின் மூலமாக சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தித் திரையுலகை நோக்கித் திரும்பி உள்ளார் ஜோதிகா.
இந்தப் படம் திரில்லர் படமாக தயாராகிறது. இப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இவர் குயின், சூப்பர் 30 மற்றும் குட்பை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடக்க உள்ளது.