தமிழ்நாடு
கருத்து சுதந்திரம் என்றால் என்னவேண்டுமானாலும் பேசலாமா? சாட்டை துரைமுருகனிடம் நீதிபதி கேள்வி!
கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து இதுபோன்று இனி அவதூராக பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்த பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த பின்னரும் தான் கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ’கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்றும், விமர்சனம் செய்பவர்கள் அதை மட்டும் செய்து கொண்டிருக்காமல் சமூகத்திற்கு நல்லது ஏதாவது செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை வாசிக்கவே நா கூசுகிறது என்று கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 5ஆம் தேதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில் சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ் சட்டம் பாய வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.