தமிழ்நாடு
பொதுமக்களை விட பரந்தூர் விமான நிலையம் அவசியமா? எதிர்க்கும் கிராம மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வளத்தூர், நெல்வாய், மடப்புரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மேல்பொடவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் மற்றும் மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
விமான நிலையம் அமைப்பதனால் ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் மேலேறி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய விளை நிலங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகளும் அகற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரமும், முகவரியும் அழிக்கப்படும் என்பதனால் அப்குதியைச் சேர்ந்த பொதுமக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினந்தோறும் பகல் இரவு நேரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக 5 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இழக்கும் ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மொட்டை அடித்து போராட்டம்
ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தின் 264 வது நாளான நேற்று ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 100 பேர் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை, நாமம் போட்டு கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கிராமத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்து, அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கிராம மக்களின் போராட்டம் செய்ததனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.