இந்தியா
பிரதமர் மோடி செப்டம்பர் 2025ல் ஓய்வு பெறப் போகிறாரா அல்லது 2026 தமிழ்நாடு தேர்தல் வரை பதவி நீட்டிக்கப்படுவாரா?

பாஜக கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்சிப் பதவிகளோ அரசுப் பதவிகளோ வழங்கப்படக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்சின் எழுதப்படாத சட்டப்படியான மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் மாதம் 75 வயது முடிய உள்ளதால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளாரா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சில நாள்களாக ஊடகங்களில் உலா வருகின்றன.
கடந்தவாரம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு இந்தாண்டு செப்டம்பர் மாதம் 75 வயது நிறைவு பெற உள்ளதால் தாம் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை செய்ய வந்ததாக தகவல்கள் கசிந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இந்தியாவின் அடுத்த பிரதமராக மராட்டிய மாநிலத்தை சார்ந்தவர் தேர்வு செய்யப்பட உள்ளார் என தெரிவித்ததால் அரசியல் களம் பரபரப்படைந்தது.
மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த முன்னால் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் நாக்பூர் பாஜக எம்பியும் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் செப்டம்பரில் ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பிரதமர் மோடியின் பதவிக்காலம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரையோ அல்லது 2029 நாடாளுமன்ற தேர்தல் வரையோ நீட்டிக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்களும் பரவி வருகின்றன.
2029ல் மோடியையே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுப்போம் என தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். பிரதமரை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பையா ஜோஷி தெரிவித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலின் போது 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்களுக்கு போட்டியிட சீட்டு வழங்க வேண்டாம் என பாஜக முடிவெடுத்திருப்பதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். அதன்படி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்கா ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டது நினைவு கூரத் தக்கது.
அடுத்த சில மாதங்களுக்கு இதுவே பேசு பொருளாக இருக்கப் போகிறதா?. போகப் போகத்தான் தெரியும்.


















