விளையாட்டு
உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் மோதுமா?: சிக்கலில் கிரிக்கெட் வாரியம்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது.
தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இது தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், ஜூன் 16-ம் தேதியன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே இந்திய அணியால் உலகக்கோப்பையை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்த்தால் இந்தியா புள்ளிகளை இழக்க நேரிடும். மேலும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வந்து இந்தியா மோதாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


















