இந்தியா
சிகரெட்டுக்களை இனி கடையில் வாங்க முடியாதா? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் புகை பிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிகரெட் பயன்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் ஒரு வருடத்திற்கு சிகரெட் பிடிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து இந்தியாவுக்கும் சில கட்டுப்பாடுகளை உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியாவில் இனி சிகரெட்டுகளை சில்லரையாக வாங்க முடியாது என்றும் பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும் என்றும் அறிவிக்க பரிந்துரை செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் கடைகளில் இனிமேல் ஒரு சிகரெட் இரண்டு சிகரெட் போன்று சில்லரையாக வாங்க முடியாத நிலை ஏற்படும் என்றும், அதனால் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் இந்தியாவில் பாக்கெட்டாக மட்டுமே சிகரெட் வாங்க முடியும் என்ற அறிவிப்பு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு 75 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வீடுகளுக்கு 22%, சிகரெட்டுகளுக்கு 50% மற்றும் புகையில்லா போகி 64% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து புகையிலைப் பொருள்களுக்கும் இனி 75% ஜிஎஸ்டி அறிவித்தால் சிகரெட் விலை உயரும் என்றும் அதனால் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறையாக சிகரெட் விற்பதை தடை செய்தல், விமான நிலையங்களில் புகைபிடிக்கும் பகுதிகளை அகற்றுதல், புகைப்பிடிக்கும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி அதிகரிப்பு, புகை பிடிப்பதால் புற்றுநோய் உருவாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை காரணமாக புகை பிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே பொது இடங்களில் இந்தியாவில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் அதை மீறினால் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புகையிலைப் பொருள்களின் விளம்பரத்திற்கும் அரசு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சிகரெட் இனி சில்லரையாக வாங்க முடியாது என்ற அறிவிப்பு வெளியானால் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.