இந்தியா
நகைக் கடையில் திடீர் தீ விபத்து.. நகைகள் எரிந்து சாம்பல்!
புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன.
புதுச்சேரி நகரின் நேரு வீதி அருகே, கோபி என்பவர் நகைக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு 10:30 மணியளவில் பூட்டப்பட்டு இருந்து நகைக் கடையிலிருந்து புகை கசிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் தீ விபத்து காரணமாக நகைக் கடையிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன.
தீ விபத்து காரணத்தைக் கண்டறிவது குறித்துச் செய்யப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.