தமிழ்நாடு
“எடப்பாடி நிலம் இல்லைனு சொல்லியிருக்காரு; அப்பறம் என்ன விவசாயி”- தினகரனின் ‘நறுக்’ கேள்வி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தன்னிடம் நிலமே இல்லை என்று தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னை எப்படி விவசாயி என்று மட்டும் சொல்லலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமமுக, இந்த முறை தேமுதிக, ஒவைசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலிப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன், நேரடியாக களம் காண்கிறார். அந்தத் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தினகரன், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்னர் தான் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில், தன் பெயரில் எந்த நிலமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் பொது, நிலமே இல்லாத தன்னை எப்படி விவசாயி என்று சொல்லிக் கொள்ளலாம். அவர் ஒரு போலி விவசாயி என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
சேலம் – சென்னை 8 வழிச் சாலை வந்தால் தான் வளர்ச்சி வரும் என்று கூவிக் கொண்டிருந்தார் பழனிசாமி. அந்த நேரத்தில் பல மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் செய்தனர். அதைப் பொருட்படுத்தாமல் இருந்த அவர் ஒரு விவசாயியா?

ஆளும் தரப்பு கொடுக்கும் பணத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம். ஆனால் அதை வாங்கிக் கொண்டு அவர்களது கதையை முடித்து விடுங்கள்’ என்று பேசியுள்ளார்.




















